யாழ். குடாவில் செல்லிடப்பேசி பயன்படுத்த படையினரின் அனுமதி தேவை

யாழ்ப்பாண குடாநாட்டில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்காப் படையினரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணத்தில் சிடிஎம்ஏ தொலைபேசிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதற்கு படையினரின் அனுமதிகள் பெறப்படல் வேண்டும். இந்நடைமுறை இம் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களாக சிடிஎம்ஏ தொலைபேசிகளுக்கான இணைப்புக்கள் யாழ். குடாநாட்டில் தடுக்கப்பட்டதுடன், செல்லிடப்பேசிகளுக்கான இணைப்புக்களும் சில மணிநேரங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கான அனுமதிப் பத்திரங்களை காவல்துறையினர் ஏற்கனவே யாழ். தொலைத் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்த அனுமதிப் பத்திரங்கள் தொலைபேசி பாவனையாளர்களுக்கு அவர்களின் இம் மாதப் பற்றுச்சீட்டுக்களுடன் அனுப்பி வைக்கப்படும் என யாழ். பிராந்திய பொறியியலாளர் என்.சிவனந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் இருந்து செல்லிடப்பேசி இணைப்புக்கள் படையினரால் அடிக்கடி துண்டிக்கப்பட்டதாகவும், யாழ். குடாநாட்டுக்கான தொலைபேசி இணைப்புக்களை படையினரே மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் 7,200 சிடிஎம்ஏ தொலைபேசிகளும், 150,000 செல்லிடப்பேசிகளும் பாவனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி : புதினம் இணையத்தளம்

0 பின்னூட்டம்(கள்):